News Image

கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு; என்ன காரணம்? - இன்றைய செய்திகள்

By Admin

இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின் கருவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு "கருவுக்குள் கரு" என்ற அரிய வகை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை கருவுற்றபோது, தவறுதலாக சிதைவுற்ற கரு ஒன்று அந்த குழந்தையின் வயிற்றுக்குள் சென்று தங்கிவிடும். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால், "கருவுக்குள் கரு என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 5 லட்சத்தில் ஒருவருக்கே இதுபோன்ற பிரச்னை ஏற்படும். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 200 பேர் இதுபோன்ற பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் 10 முதல் 15 பேருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டு உள்ளது" என்றார். மேலும், தற்போது சம்பந்தப்பட்ட கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றில் கரு போன்ற அமைப்பு இருப்பதையும், அதற்கு கை, கால்கள் போன்ற அசாதாரண அமைப்பு இருப்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. எனவே. பாதுகாப்பான பிரசவ நடைமுறைகளுக்காக அண்டை மாவட்டமான சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர் கூறினார்.