தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று இரவு (ஜனவரி 27) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், கார்த்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் ஜனவரி 26ம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்றனர்.