News Image

அமெரிக்கா: இன்னும் எத்தனை இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்? - மத்திய அரசு கூறியது என்ன?

By Admin

இன்றைய (07/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக சந்தேகிக்கப்படும் 104 இந்தியர்களை அமெரிக்கா, சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ''அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள், மோசமாக நடத்தப்பட்டது குறித்து அமெரிக்காவிடம் கவலை தெரிவித்தோம். இதுபோன்ற செயலை தவிர்த்திருக்கலாம் என கூறினோம். நாடுகடத்தப்படுபவர்களை தவறாக நடத்தக்கூடாது என்று அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.'' என்றார். ''அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.அவர்களில் 298 பேரின் விவரங்கள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அந்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன'' என விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.