News Image

மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து சிறிய நாடான டென்மார்க்கிடம் இருந்து சுதந்திரம் பெறுவதில் என்ன சிக்கல்?

By Admin

நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மார்க் கட்டுப்படுத்தும் முறை எளிதானது. அதனைத் தொடர்ந்து, கிரீன்லாந்து டென்மார்க்கின் முக்கிய காலனி ஆனது. வரலாற்றில் ஹான்ஸ் எகெடேவின் பங்கை, அவரது சிலை இன்றும் மக்களுக்கு நினைவூட்டுகிறது. ஆனால் அவரது பாரம்பரியம் விவாதத்திற்கு உரிய பொருளாக உள்ளது. சிலர் அவரை ஒரு நல்ல தலைவராக பார்க்கிறார்கள். ஆனால், கிரீன்லாந்தில் டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சி நடைபெற ஹான்ஸ் எகெடே உதவினார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியில் ஒரு நாள், அவரது வெண்கல சிலை திடீரென்று சிவப்பு வண்ணம் பூசப்பட்டு காணப்பட்டது. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில், அந்தச் சிலையை தினமும் கடந்து செல்வேன். அதனால் அந்த நாள் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. என் தந்தை நூக் நகரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் புவியியல் கற்பித்து வந்த போது, நான் இரண்டு ஆண்டுகள் கிரீன்லாந்தில் வாழ்ந்தேன். அப்போது, வட அமெரிக்காவின் ஆர்க்டிக் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட பல பூர்வகுடி மக்கள், 250 ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்தில் எகேட் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது . பெரும்பாலும், டென்மார்க் மக்களை விட மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்த பூர்வகுடி மக்கள், அவர்களது வீட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வர். அதிலிருந்து கேட்கும் பீர் பாட்டில்களின் சத்தம், அங்கு இருந்த பரவலான குடிப்பழக்கத்தின் சான்றாக இருந்தது. டென்மார்க் கிரீன்லாந்திற்கு கொண்டு வந்த தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதே சமயம், நவீன சுகாதாரம் மற்றும் நல்ல கல்வி போன்ற மறுக்க முடியாத பல நல்ல விஷயங்களையும் டென்மார்க் கிரீன்லாந்து மக்களுக்கு அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலை மீது சிவப்பு வண்ணம் பூசப்பட்டது எதிர்ப்பின் அடையாளத்தைக் குறித்தது.